Saturday, September 19, 2015

இறைநிலை அறிவு :

இறைநிலை அறிவு
பகுதி : 1 - மனிதனும் இறைநிலையும்
மனித இன வாழ்வு மிகவும் மதிப்புடையதாகும். ஏனெனில் மனிதனால் தான் பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில் தோன்றி இயங்கிக் கொண்டிருக்கின்ற சடப்பொருள்கள் பற்றியும், உணர்ச்சி அனுபோகங்களாக உணரக் கூடிய பருவுடலைப் பற்றியும், சிந்தனையும் ஆராய்ச்சியும் செய்ய முடியும். மேலும் காந்த ஆற்றலின் சிறப்பியக்கத் தத்துவமாகிய ஆன்மாவெனும் கருமையத்தைப் பற்றியும் உணர்ந்து கொள்ள மனிதனால் மட்டுமே முடிகிறது.
மனிதனில் அடங்கியுள்ள கருமையத்தில்தான் பேரியக்க மண்டல இரகசியங்கள் அனைத்தும் அலை வடிவில் சுருங்கியுள்ளன. அவை எப்போதும் அழியாத வளமுடையனவாகவும், வியப்புக்குரியனவாகவும், புலன்களுக்கு எட்டாத மறைபொருட்களாகவும் உள்ளன. இறைநிலையென்னும் மூலப்பொருள்தான் பிரபஞ்சமாக மலர்ந்து உள்ளது. தத்துவஞான ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களும் இறைநிலையென்ற பேராற்றலை நோக்கியே அனைத்து வழியிலும் தங்கள் தங்கள் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
மனித இனம் தோன்றி எவ்வளவு காலம் சென்று விட்டதோ, அக்கால முழுமையும் இன்று வரையிலும் இறைநிலையைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் வருகின்றது. எனினும் தத்துவம், விஞ்ஞானம் எனும் இரண்டு துறைகளிலும் இன்னமும் எவரும் இறைநிலை விளக்கத்தை முழுமையாக ஐயமின்றித் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவர்களால் பிறருக்குத் தெரிவிக்கவும் முடிய வில்லை. இந்த வழுக்கல் ஏன்? இதை அறிந்து நாம் தெளிவு பெறவும், மற்றுமுள்ள, வயதாலும் சிந்தனையாற்றலாலும் இறைநிலையை உணரத் தகுதியுடைய எல்லோரும் உணர்ந்து கொள்ளச் செய்யவும் முயல்வோம். இந்த அருள் தொண்டில் வெற்றி பெறுவோம்.
இறைநிலையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தே எல்லா வழுக்கல்களுக்கும் காரணம். உண்மையில் இறைநிலையே பிரபஞ்சமாக தன்மாற்றம் (Transformation) அடைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இறைநிலை வேறாகவும், பிரபஞ்சப் பொருட்கள் வேறாகவும் இருக்கின்றன என்பதே தவறான கருத்து ஆகும். எந்த ஒரு தோற்றமும், நிகழ்ச்சியும் இறையாற்றலின் பகுதியே ஆகும்.
முதல் விளக்கமாக இறைநிலையை சில அடையாளங்களோடு தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாக ஐம்புலனறிவோடு இயங்குகின்ற மனிதர்கட்கு இறைநிலையைப் பற்றிய உண்மைகளும், விளக்கங்களும் எளிதில் பிடிபடா. என்றாலும், ஆறாவது அறிவு நிலையில் முதிர்ச்சியடைந்தவர்கள் பயிற்சியினால் இறைநிலையோடு கலந்து அதன் உண்மை நிலைகளை உணர முடியும்; உணர்ந்தும் உள்ளார்கள். அந்த அனுபவங்களை அடையாளங்களாகக் காட்டி மற்றுமுள்ள மனித குலத்திற்கு அந்த அருட்பேராற்றலைப் பற்றி விளக்குவது எளிதேயாகும்.
சாதாரனமாக மனிதருக்குள் அறிவு ஆராய்ச்சி நிலையில் சில வழுக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் அவர்களுக்கு ஆறாவது அறிவு இயங்கவில்லை என்றோ, குறைவாக உள்ளது என்றோ கருத்து அன்று. அறிவின் கூர்மையும், நீடித்த சிந்தனையும் மறைபொருட்களை ஆராய்வதற்கு மிகவும் அவசியம். எந்தப் பொருளைப் பற்றி உணர வேண்டுமானாலும் அந்தப் பொருளைவிட நுண்ணிய நிலையில் அறிவு இயங்கப் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கான முறையான உளப்பயிற்சி அகத்தவம் ஆகும்.
வேதாத்திரி

No comments:

Post a Comment