Saturday, August 24, 2013

Vethathiri Maharishi Quotes 1

உலகிலே மனித குலத்தில் நாம் பிறந்து விட்டோம். நம்மை மனித சமுதாயம் உருவாக்கி வளர்த்து வாழ வைத்து வருகின்றது. மறைந்து போன, இன்றிருக்கும் கோடிக்கணக்கான சிந்தனையாளர்கள், உழைப்பாளிகள், அருட்செல்வர்கள் செய்த தொண்டுகள் நமது வாழ்வில் பொருள் வளமாக, அருள் ஒளியாக, ஆட்சி அமைப்பாக அமைந்து, நம்மைச் சிறப்போடு வாழ வைக்கின்றன. இவற்றால் பயன் பெற்று வாழும் நாம் ஒவ்வொருவரும் மனித சமுதாயத்திற்கு இயன்ற வரை நலம் புரிய வேண்டும்.

பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து முடிந்து கொண்டேயிருக்கும் குறுகிய ஆயுட் காலத்தையுடைய தனி மனிதனுக்கு நல்வாழ்வை அளித்துக் காப்பது நீண்ட ஆயுளையும் விரிந்த எல்லையுமுடைய மனித சமுதாயமே. அதில் அமைந்த நன்மைகளை எல்லாம் துய்த்து இன்புறும் ஒவ்வொரு தனி மனிதனும், அந்தச் சமுதாயத்தின் நலம் காத்துத் தான் நலம் பெற வேண்டும். பொருளும், அருளும், ஆட்சியையும் மனிதனைக் காக்கும் அரண்கள். பொருள் துறைக்கும் அருள் துறைக்கும், ஆட்சித் துறைக்கும் ஒரு மனிதன் ஆற்றும் தொண்டு அவை சிறப்புற்று ஒங்க, தனி மனிதன் எடுக்கும் முயற்சியும் செயலும் கோடான கோடி மக்களுக்கு நீண்ட காலத்திற்கு, வாழ்வில் வளம் தரும் ஊற்றாகும். அத்தகைய அறிவால், செயலால் ஒரு தனி மனிதன் உலக மக்கள் உள்ளத்தில் காலத்தால் மறக்க முடியாத நீங்கா நினைவைப் பெறுகிறான்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment