Saturday, August 24, 2013

"வேதாத்திரி" என்ற பெயர்

ஐயா! தங்களுக்கு "வேதாத்திரி" என்ற பெயர் பெற்றோர்கள் வைத்த பெயரா?
அல்லது ஆன்மீகத் துறையில் வந்த பிறகு வைத்துக் கொண்டீர்களா?

வேதாத்திரி மகரிஷி பதில்:
எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயரே ''வேதாத்திரி' 'தான்.
ஒரு நாள் சாது ஒருவர் இரவு வேளையில் எங்கள் இல்லத்திற்கு வந்துள்ளார்.
வழக்கம்போல் வந்த விருந்தினரை உபசரித்த என் பெற்றோர்கள் ஏழ்மையிலும் தங்களுக்கு எளிய உணவை அவருக்குக் கொடுத்து உபசரித்துள்ளனர்.
அப்போது உள்ளே குழந்தை அழும் குரல் கேட்டிருக்கிறது. அதை விசாரித்த பெரியவரிடம் தங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் ஓர் ஆண்மகவு பிறந்துள்ளதை என் தாயார் கூறியுள்ளார்.
உடனே அந்த பெரியவர் குழந்தைக்கு "வேதாத்திரி" என்று பெயர் வையுங்கள் என்று கூறினாராம்.
இரவில் திண்ணையில் தங்கிய அவரை காலையில் மேலும் விசாரிக்க என் பெற்றோர்கள் பார்த்த பொழுது அவர் அந்த இடத்தை விட்டுப் போய் விட்டார். அவரை காணவில்லையாம்.
பிறகு அவர் சொன்னபடியே "வேதாத்திரி" என்ற பெயரையே எனக்கு என் பெற்றோர்கள் சூட்டினார்களாம்.
இது பிற்காலத்தில் என் தாயார் எனக்கு கூறியது.
____

கேள்வி: அறிய பருவத்தில் வளரும் குழந்தைகளிடம் சினம் வராமல் காப்பாற்றி வளர்ப்பது எப்படி? முடியுமா? அவசியமா?

வேதாத்திரி மகரிஷி பதில்:
குழந்தைகளிடம் மிக்க எச்சரிக்கையாக விழிப்போடு தான் நடந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகின் மீது வளரும் ஒவ்வொரு உயிர்க்கும், செடி, கோடி, உட்பட அனைத்துக்கும் இந்த உலகை விடுத்து வெளியேறும் வேகம் உள்ளது.
அதை Velocity என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு உண்டு. தென்னை மரத்துக்கு அறுபது அடி, சாதாரண செடிக்கு ஒரு அடி என்று வைத்துக்கொள்ளலாம்.
விடுதலை வேகம் மனித இனத்துக்கு ஆறு அடி. அந்த அளவு ஆறு அடி வளர்ந்த பிறகு அது தணிந்து விடுகிறது. எனவே தான் அதன் பிறகு மனிதனுக்கு வளர்ச்சியில்லை.
அனால் இந்த ஆறு அடி வேகம், ஒரு மாதக் குழந்தையாக இருக்கும் போதே அந்தக் குழந்தையினிடம் உள்ளது. ஊக்கி விடுகிறது. எப்போதும் புடைத்துக் கொண்டிருக்கிறது.
அதனால் எந்தக் காரியத்தைச் செய்தாலும் துடுக்காகத்தான் செய்யும்.
நீங்கள் ஏதேனும் தடுத்தாலும் அதைக் குழந்தையால் ஒப்புக் கொள்ள முடியாது.
நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த வேகத்தைப் பயன்படுத்தும் முறையிலே அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.

ஏதோ ஒரு பொருளை குழந்தை எடுத்துவிட்டது. அதை கீழே போட்டு விட்டால் உடைந்துவிடும் என்று எண்ணினீர்களானால்;
அதை விடக் கவர்ச்சியான ஒரு பொருளை உடனடியாக எடுத்து குழந்தையிடம் நீட்டி,
இதோ பார் இது நல்ல பொருள் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று காட்டினீர்களானால் அதை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கும்.
அந்த அளவிலே குழந்தைகளிடம் அன்பு காட்டி விழிப்போடு தான் நடந்து கொள்ள வேண்டும்.
___

கேள்வி: கோபத்தை அடக்கி வாழ்ந்தால் கோழை என்று எண்ணி விடுவார்கள்.
இதை தவிர்க்க என்ன வழி?

வேதாத்திரி மகரிஷி அவர்களின் பதில்:
கோபம் கொள்வது தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிலே இருந்து எழக்கூடிய குழப்பம் தான் இது.
சினம் தவிர்த்த எவரையும் கோழை என்று உலகம் கூறவில்லை. மனோ வல்லமை பெற்றவன் என்று இதயப்பிரியன் என்றும் இதுவரையிலே உலகம் கூறி வந்திருக்கிறது.
சினம் கொள்வது வீரமென்ற ஒரு மாற்றுக் கருத்தை, தவறான கருத்து நாம் பதித்து கொண்டு இருக்கும் போது இந்தக் கருத்திலே இருந்து ஒப்பிட்டுப் பார்க்கும் போது ,அவரவர் அம்மாதிரி எண்ண இடம் இருக்கின்றது.

கோழை என்று பிறர் நினத்தாலும் கூட சரி, நான் சினம் கொள்ளமாட்டேன். சினத்தின் கேட்டினை நான் அறிவேன். ஆகவே சினம் கொள்ளமாட்டேன்.
அதனுடைய முடிவை நானே பார்த்து விடுகிறேன் என்ற ஒரு திண்மையோடு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் செய்து பாருங்கள்.
உங்களோடு தொடர்பு கொண்டவர்களை நீங்கள் கணித்துப் பாருங்கள். அவர்கள் உங்களை கோழை என்று எண்ணமாட்டார்கள் வீரர் என்றே போற்றுவார்கள்.
____

நம்மைத் திருத்துவோம்
உறவிலே காணுகின்ற உண்மைநிலைத் தெளிவே
துறவாகும்; துன்பமிலா இன்பம் நல்கும்;
அறவோர்கள் கண்டநெறி, அன்புநெறி; அதைவளர்ப்போம்.
திறமான வாழ்வுபெற நம்மைநாம் திருத்திடுவோம்.

துன்பம் தராத செயல்
ஒரு உணவுப் பொருள் அல்லது தின்பண்டம், அதைச் சாப்பிடுகிறோம்; இப்போது சுவையாக, இன்பம் தருவதாக உள்ளது;
ஆனால் வயிற்றுக்குள் சென்றபிறகு, அது செரிமானம் ஆகின்றபொழுது உடலுக்குத் துன்பத்தை தரலாம்.
அதுபோல சில செயல்கள் தொடக்கத்தில் இன்பமாக இருக்கலாம். பின்னர் துன்பமாக மாறும்.
நமக்கு இன்பமாக இருக்கலாம், பிறருக்கு அந்த செயல்கள் துன்பம் தருவதாக அமையலாம்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்து தனக்கோ, பிறருக்கோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிக்கோ துன்பம் தரக்கூடும் எனத் தெரிந்தால் அத்ததகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

பிறரிடமிருந்தும் அல்லது எவரிடமிருதும் எதையும் எதிர்பாராதே!
எதிர்பார்த்தல் பெரும்பாலும் ஏமாற்றத்தில்தான் முடிவடைகின்றது;
இந்த ஏமாற்றம் இன்ப ஊற்றை அடைத்து விடும்.
ஒவ்வொரு மனிதனையும் 1000பேருக்கு உதவு வகையில் தான் இறைவன் படைத்துள்ளான்.
___

வாழ்த்து
தீய எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்காமல் இருப்பதற்குப்
பயிற்சியாக நம்மையும் பிறரையும் வாழ்த்திக் கொண்டே இருக்கலாம்.
இவ்வையகத்தையும் வாழ்த்திக் கொண்டே இருக்கலாம்.

எண்ணம் ஆராய்தல்
எண்ணில் அடங்காமல் வருவதே எண்ணம்!
நமது வாழ்க்கையில் ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய்ச்சிக்குக் கொண்டு வந்தால் ஒரு மாத பயிற்சிக்குள் எந்த எண்ணம் வந்தாலும் வடிகட்டாது செயலுக்கு வராது.
'மனத்துக்கண் மாசிலன் ஆதல்' என்ற முறையில் மனத்தை தூய்மை செய்து கொண்டால் தான் வினைத்தூய்மை என்பது உண்டாகும்.

கணிப்பு
நாள்தோறும் செய்தவற்றைப் பயனை நீங்கள்
நல்லுறக்கம் கொள்வதன்முன் கணித்துக் கொள்வீர்
மீள்வதில்லை போயினவை எனினும் நீயோ
மேற்பட்டாய் அனுபவத்தில் அதுவே இலாபம்.

தற்சோதனை
விளைவறிந்து நலமுணர்ந்து நல்ல நாட்டத்தோடு எண்ணம், சொல், செயல்களைப் பயன்படுத்தும் கலையே தற்சோதனை.

குடும்ப அமைதி
ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி, தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாடோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை அறத்தை கணவன்-மனைவி இருவருமே உயிர்போல் காக்க வேண்டும்.
இத்துறையில் அடையும் வெற்றியின் அளவாகவே குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் இன்பமும் அமையும்.

ஒழுக்கம்
பழக்கத்தால் மனிதன் உயரவும் முடியும், தாழவும் முடியும்.
வாழ்வதற்கு உயர்வளிக்கும் பழக்கங்களே ஒழுக்கம் எனப்படும்.

ஒழுக்கம்
மனம், மொழி, செயல், மூன்றாலும்,
தனக்கோ, பிறர்க்கோ, தறகாலத்திலோ, பிற்காலத்திலோ,
அறிவிற்கோ, உடல் வளர்ச்சிக்கோ துன்பம் விளையாத
அளவோடும், முறையோடும் எச்செயலையும் ஆற்றும் பண்பாடு தான் ஒழுக்கம் ஆகும்.

உயிர்ச்சக்தி
புலன்கள் எந்தப் பொருளை உணர்ந்தாலும் அனுபவித்தாலும், நம்முடைய உயிர்ச்சக்தி அந்த இடத்திலே செலவாகிறது.
மேலும் மேலும் செலவாகின்ற போது உடலில் உள்ள அணு அடுக்குகள் சீர்குலைந்து வலி, நோய், துன்பம் ஏற்படுகின்றன.

சினம்
நாம் அமைதியாக இருக்கும் போதெல்லாம் 'நான் கோபத்தை ஒழித்து விடுவேன்' என்ற திடசங்கல்பத்தைப் பல தடவை செய்து கொண்டு விழிப்போடு இருந்தால்
முதலில் சில சமயங்கள் தோல்வி அடைந்தாலும் பிறகு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

சினம்
நமக்கு தவத்தாலும் தற்சோதனையாலும் பெற்ற சக்தியனைத்தும் நாம் கோபமடைந்தால் பயன்படாமலேயே போகும்.
இந்த சக்தியை நாமே முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் சினத்தைத் தவிர்க்கத் தான் வேண்டும்.

தவப் பலன்கள்
தவத்தின்போது புலன்களின் இயக்கம் வெகுவாகக் குறைந்துவிடுவதாலும், எப்போதும் அலைபாய்ந்து கொண்டிருக்கிற மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும்,
நமது உயிராற்றலின் செலவு தவிர்க்கப்படுகிறது. ஆற்றல் சேமிக்கப் படுகிறது.

தவப் பலன்கள்
இந்த ஊரில் பெய்த மழை பக்கத்து ஊரிலும் பயனாவது போல, ஒருவர் இயற்றும் தவம் அவரது வாழ்க்கைத் துணைக்கும் பயன்படும். அதே போல பெற்ற மக்களுக்கும் ஒருவர் இயற்றும் தவம் பயனாகும்.

"வந்ததுன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப்போக்க
வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம்காத்து
எந்தத் துன்பம் வரினும் எதிர் நோக்கி நிற்பாயேல்
இன்பமே மிகுதிப்படும் துன்பங்கள் தோல்வியுறும்.

ஆட்சி நிலை
வாழ தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்
ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்
கோளை, கயவர், கொலைஞர், தடியர்கள்,
ஏழை, நோய் உற்றோர் எங்கும் சாட்சியாம்
________
Published in Dinamalar
நான் யார்?
* "நான் யார்' என்று ஒருவர் தன்னைத்தானே பற்றி செய்யும் ஆராய்ச்சி இறையுணர்வில் முடியும். இறைநிலையை உணரத் தொடங்கினால் மனதில் தெளிவுண்டாகும். ஆசைகள் ஒழுங்கு பெறும்.
எது எல்லாவற்றுக்கும் பெரிதோ, அதைவிடப் பெரியது வேறெதுவும் இல்லையோ, அந்தப் பரம்பொருளை உணரும்போது, ஆசை உண்டாக இடமில்லை.

* உடல் அளவில் குறுக்கிக் கொண்டிருக்கும் போது, நான் வல்லவன், செல்வந்தன், பெரியவன், அழகன் என்ற தற்பெருமை உண்டாகிறது. அல்லது ஏழை, நோயாளி என்ற தாழ்வு நிலை உண்டாகிறது.
யாரோடும் ஒப்புவமை இல்லாத ஒரு பெரிய பொருளை (இறைவனை) போல நம்மையும் உணர்ந்துவிட்டால் தற்பெருமை உண்டாகாது.

* நானே பிரம்மமாக (தெய்வமாக) இருக்கிறேன். பிரம்மமே எல்லாமாக இருக்கிறது என்று உணரும்போது, எதன் மீதும் ஆசை வராது. அந்நிலையில் நான் என்னும் அகப்பற்று, எனது என்ற புறப்பற்று ஆகியவை நம்மை விட்டு விலகிவிடும்.

* தன்னை அறிந்த நிலையில் அன்பும் அறிவும் பிறக்கிறது. அந்நிலையில் ஞானிகள் எல்லாம் சொல்கின்ற ஆன்மநேய ஒருமைப்பாடு மலர்கிறது. அறிவில் பூரணத்துவமும், அடக்கமும், அமைதியும் உண்டாகிறது.
___

நம்மை நாமே வாழ்த்தலாம்
* உள்ளத்தில் இருக்கும் அமைதி உடல் முழுவதும் பரவினால் புத்துணர்ச்சியும், புது பலமும் உண்டாகும். அந்த சமயத்தில்,""ஆண்டவன் அருளால் மனதில் அமைதி நிலவுகிறது. உடல் முழுவதும் புத்துணர்ச்சியும், புதுபலமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க வேண்டும்'' என்று மனப்பூர்வமாக நினைக்க வேண்டும். இவ்வாறு நினைப்பது நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் வாழ்த்தாகும்.
* நீங்கள் உங்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதற்கு உடல்பலம், ஆயுள், ஆரோக்கியம் ஆகியவை மிகவும் அவசியமானவை. நாள்தோறும் உங்களுக்கு நீங்களே இந்த எண்ணங்களை வற்புறுத்தி சிந்திக்கும் போது அவை மனப்பதிவிலும், உடலிலும் ஆழ்ந்த முத்திரைகளைப் பதிக்கிறது. மொத்தத்தில் இது நமக்கு நாமே ஆசி வழங்குவது போலத் தான். அப்பதிவுகள் நம் செயல்களில் வெளிப்படத் தொடங்கும். அதனால், நம் வாழ்க்கை மேம்பாடு அடையும்.
* விழித்திருக்கும் போது மட்டுமின்றி, தூக்கத்திலும் நல்ல எண்ணஅலைகள் சிறந்த பலன்களை நமக்குத் தரும். நாளடைவில் நாம் தன்னிறைவு பெற்றதோடு அல்லாமல் மனைவி,மக்கள், நண்பர்கள் என்று எல்லாத் தரப்பினரும் நலம் பெற சிந்திக்க வேண்டும். நல்ல மனதோடு எல்லோருக்கும் வாழ்த்து வழங்கும் போது நல்ல சமுதாயம் உருவாகிறது. ஒருவருக்கொருவர் கொள்ளும் நட்புறவும் அன்பும் பலப்படுகிறது.
+ தத்துவஞானி வேதாத்ரி மகரிஷி

No comments:

Post a Comment