Tuesday, August 18, 2015

பேரறிவு :



இருப்புநிலை, சூன்யம், ஒன்றுமில்லாதது என்று பலரும் எண்ணுகின்றனர். இது தவறானது. இருப்புநிலை எல்லாவற்றையும் தன்னுள் பெற்றுள்ளது. அனைத்து பொருளும் இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது. இதனுள் இயங்குகின்றது. இருப்புநிலையை கடல் என்று நாம் எண்ணினால் பிரபஞ்சத்தில் உள்ள மிகச்சிறிய பொருள்களிலிருந்து மிகப் பெரிய பொருள் வரை அதன் இயக்கங்கள், சக்திகள் அனைத்தும் கடலில் தோன்றுகின்ற அலைகளாகும். அலைகள் கடலில் தோன்றி, கடலின்மேல் அசைந்து, கடலில் முடிவடைகின்றது. அதே போன்று மிகச்சிறிய பொருளிலிருந்து மிகப் பெரிய சூரியன் வரை உள்ள அனைத்து பொருள்களும், உயிர்வாழும் ஜீவன்களும் இருப்புநிலையிலிருந்து (Static State) தோன்றி, அதனுள் இயங்கி, அதனுள்ளே முடிவடைகின்றது.

நீக்கமற நிறைந்துள்ள பூரணத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருப்பு நிலையில் மிதக்கின்றன. அசைகின்றன. தண்ணீரில் அதன் நுரை மிக நின்றாகத் தெரியும். நீரில் நுரை மிதப்பதைப் போன்று அனைத்துப் பொருள்களும் பூரணத்தில் மிதந்து கொண்டு உள்ளன. எண்ணிப் பாருங்கள். ஒரு பொருள், அதன்மேல் மற்றொரு பொருள் இதில் எது சக்திவாய்ந்தது. அசைகின்ற ஒவ்வொரு பொருளையும் தன்னிடம் பிடித்துக் கொண்டிருப்பது இருப்புநிலை. பிரபஞ்சம் முழுதும் பூரணத்தில் அடங்கியுள்ளது. பூரணத்தில் மிதந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கிறது. சுற்றிலும் சூழ்ந்துள்ள இருப்புநிலையின் அழுத்தத்தால் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு துகளும் தற்சுழற்சி வேகத்துடன் இயங்கிக் கொண்டுள்ளது. பொருள்களின் தன்மைக்கேற்ப பிரபஞ்சம் முழுதும் வெவ்வேறு வேகத்துடன் அவைகள் இயங்கிக் கொண்டுள்ளது. இருப்புநிலையே எல்லாம் வல்லது, அதுவே ஆதிநிலை.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

ஆசையின் மயக்கம் :

தேவையைக் காரணமாகக் கொண்டு எழுந்த ஆசை தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும். பசி தாகம் முதலிய இயற்கைத் துன்பத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை துன்பத்தைப் போக்குவதோடு நின்றாக வேண்டும். உயிராற்றல் செலவைச் சரி செய்ய எழுந்த ஆசை அப்படிச் சரி செய்வதோடு நின்றாக வேண்டும். ஆனால் பொதுவாக அப்படி நிற்பதில்லை.
.
ஆசையின் மயக்க நிலை :
தேவை நிறைவின் போது ஏற்பட்ட திருப்தியின் மீது அல்லது இன்பத்தின் மீது உயிர் மயங்கிவிடுகிறது. எந்தக் காரியம் இன்பத்தைத் தந்ததோ, அந்தக் காரியத்தைத் தேவையில்லாமலே செய்ய விழைகிறது. அதாவது உண்மையான தேவை இல்லாமலேயே ஆசை எழுகிறது. எழுகிற துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆசை தோன்றியது போக, இன்பத்தைச் செயற்கையாகத் தேடும் முயற்சியிலே இப்போது ஆசை எழுகிறது. இந்த ஆசையைத் தான் கட்டுப்படுத்த வேண்டும். எழாமலேயே காக்கவும் வேண்டும்.
.
உயிராற்றல் குறைவை நிறைவு செய்வதற்காக அல்லாமல், இயற்கைத் துன்பத்தைத் தீர்ப்பதற்காக அல்லாமல்,உண்மையான உயர்வான தேவையின் காரணமாக அல்லாமல் ஏற்படும் ஆசைகளெல்லாம் அறிவின் மயக்கத்தால் தோன்றுவன. அவை துன்பத்தைத்தான் தரும்.
.
இன்னொன்று, தகுந்த காரணத்தாலேயே ஏற்பட்ட இச்சைகளானாலும், அவ்வாசைகளை நிறைவு செய்யும் முயற்சியில் தனக்கோ பிறர்க்கோ துன்பம் தோன்றுமானால், அவ்வாசைகளும் தடுக்கப்பட வேண்டியவையே. மேலும், நிறைவேறிய பின்னர் தீய விளைவுகளைத் தரக்கூடிய இச்சைகளையும் கட்டுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனவளக்கலை ஒரு பெட்டகம் :

தான் உயரவும், பிறரையும் உயர்த்தவும் ஏற்ற பயிற்சியும், தொண்டும், இரண்டும் மனவளக்கலையில் அடங்கியுள்ளன.
.
இரண்டு வேலையும் ஆக்கினை, துரியம், சாந்தியோகம் தவறாமல் தவமியற்றி வாருங்கள். மன அமைதி அறிவுக்கூர்மை, அறிவின் ஓர்மை, மன உறுதி இவை உண்டாகும்.
.
தற்சோதனையில் எண்ணங்களை ஆராயுங்கள். விழிப்பு நிலையில் அறிவு செயல்படும். நலம், தீது உணர் ஆற்றல் உண்டாகும். வேண்டாப் பதிவுகளை - வினைபதிவுகளை மாற்றி விடலாம்.
.
ஆசைச் சீரமைப்பு பயிற்சி செய்யுங்கள். உடல் நலம்; மனவளம், பொருள் வளம், நற்புகழ், நிறைவு இவை பெருகும். அமைதியுண்டாம்.
.
சினம் தவிர்ப்பு பழகுங்கள். குடும்பம், நண்பர்கள், தொழில் செய்யுமிடத்திலுள்ளோர், உற்றார் உறவினர் இவர்களிடம் உங்கள் அன்பு, நட்பு, இவைபெருகும். இனிமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
.
கவலை ஒழிப்பு பழகுங்கள். அச்சமின்மை, மெய்யுணர்வு, உடல் நலம், மனநிறைவு இவையுண்டாகும்.
.
நான் யார் என்ற ஆராய்ச்சியில் தெளிவு பெறுங்கள். பேரியக்க மண்டலம், தோற்றம், இயக்கம், விளைவு அணைத்து மறை பொருட்களும், மனம், உயிர், மெய்ப் பொருள் உணர்வு உண்டாம்.
.
இவ்வளவு பயிற்சியும் பழக்கமும் இணைந்த ஒரு வாழ்க்கை நலக்கல்வியே "மனவளக் கலை" யாகும். இக்கலையை எளிய முறையில் கற்கும் பேறு பெற்றிருக்கீர்கள். இக்கலையின் மாண்புணர்ந்து பழகி நலம் பெற்று மனதில் நிறைவு பெறுங்கள். மனநிறைவைப் பெற்றுவிட்டால் அறிவு மேலும் உயர்ந்து சிறந்து விளங்கும். பிறவியின் நோக்கம் வெற்றி பெறும். இத்தகைய உயர் வாழ்வுக்கு ஏற்ற ஒரு பெட்டகம் மனவளக்கலை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Tuesday, July 7, 2015

அத்வைதம் த்வைதம் :



அத்வைதம் த்வைதம் :
--------------------------------


.
நீங்கள் கடையில் தேங்காய் வாங்குகிறீர்கள்; தேங்காய்க்குள் தண்ணீர் இருக்கிறது. நீங்கள் ஒரு எலுமிச்சம் பழம் வாங்குகிறீர்கள்; அதற்குள்ளும் நீர் இருக்கிறது, அதை ஜூஸ் (Juice) என்கிறோம். இதேபோல எந்த இடத்தில் நீர் இருந்தாலும் அது நமக்குத் தேவைப்படுவதாகவே உள்ளது. சில இலைகளில் கூட நீர் இருக்கிறது; கசக்கிப் பிழிந்து அதை உபயோகப்படுத்துகிறோம். ஒவ்வொன்றிலிருந்து கிடைக்கும் நீருக்கும், தனித்தனிப் பெயர்களைக் கொடுத்து அவற்றை உபயோகப்படுத்துகிறோம்.

.
இதே நீரின் மூலம் என்ன? தேங்காய்க்குள் எப்படி தண்ணீர் வந்தது? நிலத்திலிருந்து தானே? அப்படியானால் நிலத்திற்கு, பூமிக்கு எப்படி தண்ணீர் வந்தது? மழையிலிருந்து வந்தது, மழை எப்படி நீரைப் பெற்றது. கடலிலிருந்து, கடல்நீர் ஆவியாகி மேகமாக மாறுவதால் வந்தது.

.
இதே தத்துவம் தான் எலுமிச்சம் பழத்திலுள்ள நீருக்கும், இலைகளில் உள்ள நீருக்கும் ஏற்றது. தேங்காய்க்குள்ளும் எலுமிச்சம் பழத்திற்குள்ளும், இலைகளுக்குள்ளும், எல்லாவற்றிலும் கடல் நீரைத் தானே காண்கிறோம்? இதுதான் அத்வைதம்.

.
பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களையெல்லாம் மறந்து விடாமல் மூலத்தைப் பார்க்க வேண்டும்.

.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"மனிதனே நீயார்? சொல்!
மனமென்பதெது ? கூறு!
மயங்கினாயேல் நீ மதிக்கும்
மற்றவெலாம் சரியாகா! "

.
கடவுள் :

"உருவங்கள் கோடான கோடியாய், அவை
யுள்ளும் புறமும் அரூபமாய்,
ஊடுருவி நிறைந்தியங்கும் ஒருசக்தி,
உயிராகும், இயற்கையாகும் கடவுளாகும்."

.
அத்வைதம், துவைதம் :
--------------------------------------

"கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்
கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்
கற்கண்டைக் கரும்பு ரசம் என்றால் அஃது
கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்
கற்கண்டு கரும்புரசம் வேறு வேறாய்க்
காட்டுவது துவித நிலை விளக்கம் ஒக்கும்
கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்
கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால்.

.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)



மனதின் தரத்தை உயர்த்தும் எளிமைப்படுத்தப்பட்ட
------------------------------------------------------------------------
குண்டலினி யோகம் (Simplified Kundalini Yoga)
-------------------------------------------------------------
.
"உலக உயிர்கள் அனைத்திலும் மனிதன் மிகவும் உயர்ந்தவன். இயற்கையின் பரிணாமச் சிறப்புகள் அனைத்தும் அவனிடம் ஒருங்கிணைந்துள்ளன. மனிதனிடம் இவ்வளவு பேராற்றல் இருந்தும் அவன் தன் ஆற்றலின் பெருமையை, தன் ஆற்றலின் முழுமையை மறந்திருக்கிறான். அதனால் அப்பேராற்றல் அவனிடம் இயக்கம் பெறாமல் பலம் குன்றியிருக்கின்றது. இதை மூட நிலை எனலாம். 'மூடம்' என்றால் 'மறைவு' என்று பொருள். அறிவு இருந்தும் அது அவனிடம் இயக்கம் பெறாமல் இருப்பவன். அறிவு இருப்பது வெளிப்படாமல், அதாவது மறைவாக இருக்கும் நிலையில் உள்ளது. இயக்கம் பெறாமல் தடைப்பட்டிருக்கும் நிலையாகும். இந்த நிலை மாற வேண்டும். இந்த நிலை மாற வேண்டுமானால் தகுந்த மனப் பயிற்சியின்றி முடியவே முடியாது.
.
ஏனெனில், தவறிழைப்பதும் மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுகவேண்டியதும் மனமே. மனதை பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்வது எப்படி முடியும் ? முடியாது; மனம் தான் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு மெய்ப்பொருள் உணர்ந்த குருவின் மூலம் முறையான அகத்தவப் பயிற்சியைக் (Simplified Kundalini Yoga) கற்றுக்கொண்டு, இயற்கைத் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து, மதித்துப் போற்றி பயின்று பயன் கொள்ள வேண்டும்."

"வாழ்க்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தையும், அந்நோக்கத்திர்கேற்ற வாழும் முறை என்ன என்பதையும் அறிந்து கொள்வதுதான் "ஞானம்".
.
"கர்மம் = செயல் அல்லது வினை. யோகம் = ஒன்றுபடுதல்".
.
"நல்லதையே செய்யச் செய்ய நல்ல எண்ணங்கள்,
நல்ல செயல்கள், நல்ல வாழ்க்கை வந்துவிடும்"
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

புலன் வழி அறிவு:



புலன் வழி அறிவு:
.
ஐம்புலன்கள் வழியாகத் தனக்கும் பிறதோற்றங்கட்கும் அல்லது இருவேறு தோற்றங்கட்கும் இடையே பருமன், விரைவு, காலம், தூரம் ஆகிய நான்கை ஒன்றோடொன்றை ஒப்பிட்டுக் காணும் வேறுபாட்டை உணர்வதும் அவ்வாறு உணரும்போது உடலுக்கும் உயிருக்கும் இடையே ஏற்படும் உயிராற்றலின் சிதைவானது, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையான பஞ்சதன்மாத்திரை இயக்க அளவு உணர்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அனுபவமாகக் கொள்வதும் புலன் வழியறிவாகும்.
.
மனம் உணர்ச்சியில் எல்லை கட்டித் தனது நிலை மறந்து உணர்ச்சி வயமாகி ஆறுகுணங்களாகச் சூழ்நிலைகட்கொப்ப மாற்றமடைகிறது. இந்த நிலையில் தான் துன்பங்களைப் பெருக்கும் பழிச்செயல்களும் பதிவுகளும் ஏற்படுகின்றன. உயிரில், மூளையில், வித்தில், உயிரணுக்களில் இப்பதிவுகள் மீண்டும், மீண்டும் பிரதிபலிக்கும் போது அதே செயலைச் செய்ய உயிருக்குத் தூண்டுணர்வு ஏற்பட்டுச் செயல் புரியும் பழக்கம் ஏற்படுகிறது.
.
இம்முறையில் செயல்படும் அறிவு நிலையை அறிவின் மயக்கநிலை என்றும் - மாயை என்றும் வழங்குகிறோம். இம் மன நிலையில் வாழ்பவர்கள் துன்பக் கருவூலமாக இருப்பதால் இவர்களை நடைப்பிணம் என்று சில ஞானிகள் மொழிந்தனர்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
"அறிவு அறிவுக்கு அடிமையாவதே "பக்தி."
அறிவை அறிவால் அறியப் பழகுதல் "யோகம்."
அறிவை அறிவால் அறிந்த நிலையே "முக்தி."
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே "ஞானம்".
.
"அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.
விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,
மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,
இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை".
.
அமைதியின்மை எதனால்?

"அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார் அறியாதோர் உடலளவில் எல்லையானார்
அறிவறிந்தோர் ஆறுகுணங்கள் நிறைவமைதி,
அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;
அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,
அச்சம், போர், இவையாகித் துன்பம் ஏற்பார்
அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே
அமைதியின்மை விளைந்துளது மனிதர் வாழ்வில்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

கணவன் - மனைவி நட்பு :

கணவன் - மனைவி நட்பு :

கணவன் மனைவி நட்பின் மதிப்பை உணர்ந்து அதைக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவில் கொண்டால் மற்ற தேவையற்ற குறைபாடுகள் எழவே எழாது. நமது மனவளக் கலையில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொள்வதை அதிகமாக வலியுறுத்தி வருகிறோம். நட்பையும் அன்பையும் வளர்க்க வாழ்த்து ஒரு ஆற்றல் வாய்ந்த மந்திரமாகும்.

கணவன் மனைவி இருவருமே மனவளக்கலை பயின்றால் நல்ல பயன் கிட்டும். சில காரணங்களால் ஒருவருக்கு இக்கலையில் விருப்பமில்லாமலிருக்கலாம். அதனால் ஒருவரே ஒரு குடும்பத்தில் மனவளக்கலையில் ஈடுபட்டு வரலாம். எனினும் அந்த ஒருவர் சிறப்பாக இக்கலை பயின்று தன் தரம் உயர்த்தி மற்றவர்க்கு நலம் விளைத்தும் வாழ்த்தியும் வந்தால் நிச்சயம் அவரும் குறுகிய காலத்திலேயே இக்கலையில் விருப்பங் கொள்வார்கள்.
.
பல மக்கள் வாழ்வில் தொடர்பு கொண்டு கண்ட உண்மைகளையும், என் வாழ்வில் கண்ட அனுபவங்களையும் வைத்துக் கொண்டே மேற்கண்ட அன்புரைகளை வழங்கியிருக்கிறேன். இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பி படித்து, ஆழ்ந்து சிந்தித்து உங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு நிறைவு பெறுங்கள். எனது அனுபவ அறிவைத் தவிர வேறு என்ன நான் உங்களுக்குக் கொடுக்க முடியும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"குடும்ப உறுப்பினர் அனைவருக்குள்ளும்
உறுதியான, நெருக்கமான, உண்மையான
இனிய நட்பு நிலவ வேண்டும்".

.
"கணவன் மனைவி நட்பு தான்
உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கது".

.
"வாழ்க வளமுடன் என்று சொல்லும் போது பிறர்
உள்ளத்திலே நமது கருத்து நல்லதொரு
இனிய நட்புறவை வளர்க்கிறது".

.
"வாழ்க்கையிலே மேம்பாடாக நற்றுணையாக மதிக்க வேண்டியது
கணவனை மனைவியும், மனைவியை கணவனுமே".
.
"அருவநிலையாய் இயங்கும் அறிவு வாழ்வில்
அவ்வப்போ தொருபொருளின் தொடர்பு கொண்டு
மருவிநிற்கும் நிலைகளைச் சொற்குறிப்பால் காட்ட
மாற்றுப் பெயர்கள் பல உண்டு, அவற்றுள் ஆண்பெண்
இருவர் உளம் ஒன்றுபட்டு உலகில்வாழ
எண்ணத்தால் முடிவுகண்டோ செயலில் கொண்டோ
ஒருவர் ஒருவர்க்கு உடல்பொருளோடாற்றல்
உவந்து அர்ப்பணித்து நிற்கும் நிலையே காதல்."
.
இளமை நோன்பு, இல்லறம், தொண்டு :

"வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயிற்சி ஏற்கும் முறையை
வகைப்படுத்த இளமை நோன்பாகும்; பொறுப்போடு
வாழ்வாங்கு வாழ ஒரு வாழ்க்கைத் துணை ஏற்று
வழியோடு கடமையுணர்ந்தாற்ற இல்லறம் ஆம்;
வாழ்வினிலே மறைபொருளாம் உயிர் அறிவை உணர
வளமான உளப்பயிற்சி அக நோக்குத்தவமாம்;
வாழ்வதனை முற்றுணர்ந்து அதை அமைதி வெற்றி
வழிகண்டு வாழவைக்கும் பேரறமே தொண்டு".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.